திருத்தணி அருகே குடிநீர் கேட்டு, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி அருகே உள்ள தாழவேடு காலனி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோடை காலம், வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனது. இதனால், தாழவேடு காலனியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்த 10 நாள்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திருத்தணி - நாகலாபுரம் சாலையில் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.