மீஞ்சூர் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிற்பயிற்சி மாணவர்கள் 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
மீஞ்சூர் அருகே உள்ள பட்டமந்திரி கிராமத்தைச் சேர்ந்த தசரதன் மகன் காமேஷ் (18). அதே பகுதியில் வசித்து வரும் சம்பத் மகன் நவீன்குமார் (18). இவர்கள் இருவரும் சென்னை வள்ளலார் பகுதியில் உள்ள ஐடிஐ (அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில்) பயின்று வந்தனர்.
இந்நிலையில், காமேஷும், நவீன்குமாரும் புதன்கிழமை இரவு பட்டமந்திரியில் இருந்து மீஞ்சூர் கடை வீதிக்கு பைக்கில் வந்தனர்.
பின்னர், வீடு திரும்பும்போது, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது, எதிரே சென்னை பிராட்வே பகுதியில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், காமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமாரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.