திருவள்ளூர் மாவட்டத்தில், கரும்பு விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
விவசாயிகள் நிழல் கூண்டு அமைத்து கரும்பு விதை உற்பத்தி செய்யும் புதிய முறையை கடந்தவாரம் ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
இதற்காக அமைக்கப்பட்ட கரும்பு விதை உற்பத்தி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதில், பெரும்பாக்கம், கொழுந்தலூர், வெண்மனம்புதூர், ஆற்றம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கரும்பு விதை உற்பத்தி மையங்களை பார்வையிட்ட பின்னர் அவர் பேசியது:
இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் 43 லட்சம் கரும்பு விதைகள் தேவைப்படுகின்றன. இந்த விதைகளை நிழல் கூண்டு அமைத்து உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 25 ஆயிரம் மானியத்தில் நிழல் கூண்டு அமைத்துத் தரப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார். ஆட்சியரின் ஆய்வின்போது வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.