திருவள்ளுர் மாவட்டத்தில் 6 இடங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற உள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும். இதற்காக வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு "அம்மா' திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம். இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்ள
இருக்கின்றனர்.
இதில், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்றைய தினமே வழங்கப்படும். இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) குறிப்பிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் முகாம் நடைபெறும்.
இதில், பொன்னேரி-நெய்தவாயல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகிலும், திருத்தணி-களாம்பாக்கம் கிராம நிர்வாக அலுகிலும், ஊத்துக்கோட்டை-மாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-அயநல்லூர் கிராமத்தில் நியாய விலைக்கடை எதிரிலும், திருவள்ளுர்-தொடுகாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகிலும், பள்ளிப்பட்டு-கொல்லாலகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு அருகிலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. அதனால், அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று மனுக்களை அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.