திருத்தணியில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த, 300 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி மேட்டுத் தெரு, தானியங்கி ரயில்வே கேட் அருகில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் பாரதி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை, மேட்டுத் தெரு மற்றும் தானியங்கி ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர். அதன் எடை 300 கிலோ ஆகும். தொடர்ந்து, ரேஷன் அரிசி மூட்டைகளை திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.