திருத்தணி நகராட்சியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரக்கோணம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை மற்றும் ம.பொ.சி. சாலை ஆகிய இடங்களில் 1,000 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
அடிக்கடி விபத்து: இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மாநில நெடுஞ்சாலை குறுகியதாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து போலீஸார், தங்களால் இயன்றவரை வாகனங்களை சீர்படுத்தி அனுப்புகின்றனர். இருப்பினும், குறுகிய நெடுஞ்சாலையால் தினமும் குறைந்தபட்சம் ஒரு விபத்தாவது ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக, அரக்கோணம் சாலையில் வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
சாலையை அகலப்படுத்த கோரிக்கை
மேலும் பாதசாரிகள், சாலையை கடக்கவும் அச்சப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்களை சாலையிலேயே விடுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.