சென்னை மாதவரத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கவும், கண்டறியவும் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதவரத்தில் 32-ஆவது வட்ட திமுக சார்பில் டெங்கு, பன்றிக் காய்ச்சலைத் தடுக்கவும், கண்டறியவும் இலவச மருத்துவ முகாம் வட்டச் செயலாளர் குட்டிமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு பகுதிச் செயலாளர் ஜி.துக்காராம் முன்னிலை வகித்தார். இதில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் தொடர்பான மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து, அனைவருக்கும் இலவச மருந்துகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்வில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் மாதவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை 32-ஆவது வட்டச் செயலாளர் குட்டிமோகன் செய்திருந்தார்.