இருசக்கர வாகனத்தில் தலைக்கசவசம் அணியாமல் சென்றோருக்கு அபராதம் விதித்து, அத்தொகையில் தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதித்து,
அத்தொகையில் தலைக்கவசம் வழங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலுவலகத்துக்குள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றோரிடம் தலைக்கவசம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த நபர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 500 விதித்து, அத்தொகையில் தலைக்கவசத்தையும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோல், ஆட்சியர் வளாகத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்புறம் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர்.