மீஞ்சூர் அருகே திங்கள்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் மீது கன்டெய்னர் லாரி உரசியதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மீஞ்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளிக்கு தனியார் வேன் சென்று கொண்டிருந்தது. வேனில் 22மாணவர்கள் அமர்ந்திருந்தனர். மீஞ்சூர்- பொன்னேரி சாலையில் உள்ள நாலூர் ஏரிக்கரை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, வேனை முந்த முயன்றது.
அப்போது வேனை உரசியபடி லாரி சென்றுள்ளது. இதையடுத்து, வேன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் பிரேக் பிடித்துள்ளனர். அப்போது லாரியும், வேனும் உரசியபடி நின்றன. இதில், வேனின் முன்புற கண்ணாடி உடைந்தது. வேனில் இருந்த 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.