கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபார்க்க, சீரமைக்க அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபார்க்க, சீரமைக்க அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சிறுபான்மையினர் நலத் துறைக்கு அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதியின் அடிப்படையில் நிதியுதவி வழங்க இருப்பதால் தேவாலயங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, கிறிஸ்தவ தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடங்களில் இயங்கி இருக்க வேண்டும். தேவாலயமும், தேவாலயம் கட்டப்பட்ட இடமும் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எந்த நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் படிவம் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.