விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசு விதிமுறைகளை விழாக் குழுவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தெரிவித்தார்.
விநாயகர் சிலை அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, டிஎஸ்பி கங்காதரன் பேசியது:
விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப் பிடிக்கக் கூடிய ஓலை குடிசை அமைக்கக் கூடாது. சிலை அமைக்கும் இடத்தில் அதற்கான அனுமதி பெற்ற பின்னரே மின் இணைப்பு வழங்க வேண்டும். கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொருள்களால் தயார் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க கிரேன் வசதி ஏற்படுத்தித் தரப்படும். விழா நிறைவில், காவல் துறை அறுவுறுத்தியுள்ள வழித்தடங்கள் வழியாகச் சென்று நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க வேண்டும். அரசு விதிமுறைகளை விழாக் குழுவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் ஆய்வாளரை அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என்றார். திருவள்ளூர் காவல் வட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.