தொழுநோயாளிகளுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட உதவித் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கும்மங்குளத்தைச் சேர்ந்த தொழுநோயாளிகள் சங்கத்தினர், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
தொழுநோயால் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கும்மங்குளத்தில் வசித்து வருகின்றனர். தற்போது, இவர்கள் குப்பைகள் சேகரித்தும், தெருவோரமும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 1999-இல் அரசு இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், வருவாய்த்துறை அலுவலகத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை. நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1500-ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், உயர்த்தப்பட்ட தொகை இதுவரை தொழுநோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும், இந்தக் குடும்பங்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்களுக்கான பட்டியலில் சேர்த்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.