திருவள்ளூர் அருகே சேதமடைந்த நியாய விலைக்கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள சித்தம்பாக்கம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ரேஷன் பொருள்களை வாங்குவதற்காக பகுதி நேர கூட்டுறவு நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அரிசி, சர்க்கரை மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் கட்டடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.
நியாய விலைக் கடையின் உள்பகுதியில் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் மழை நீர் ஒழுகி அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் பொருள்கள் சேதமடையும் வாய்ப்புள்ளது. அதனால், ரேஷன் பொருள்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் கட்டடம் முழுவதையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.