திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் ரூ.6 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
திருவள்ளூரை அடுத்த நத்தம்மேடு பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் புஞ்சை நிலத்தை தனியார் ஆக்கிரமித்து கட்டடம் அமைத்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வருவாய்த்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், வட்டாட்சியர் சீனிவாசன், நத்தம்மேடு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று பதிவேடுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, குறிப்பிட்ட பகுதியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தில் 20 சென்ட் இடம் மட்டும் திருநின்றவூர் காவல் நிலையக் கட்டடம் அமைக்க அரசால் ஒதுக்கப்பட்டிருந்ததும், மற்ற பகுதியை தனியார் ஆக்கிரமித்து இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 6 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீர் நிலை புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்புகள்அமைக்க இந்த இடத்தை பயன்படுத்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.