அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கண்டித்து ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களையும் இணைத்து எல்கேஜி, யுகேஜி ஆங்கில வழிக் கல்வியை தொடங்குவதைக் கண்டித்தும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுடன் 3,500 தொடக்கப் பள்ளிகளை இணைப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், இளங்கோவன், சௌத்ரி, ஞானசேகரன், பாஸ்கரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு இத்திட்டத்தை கைவிடாவிடில், வரும் 22-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.