பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க.அன்பழகன் புதன்கிழமை வழங்கினார்.
திமுக-வில் 15-ஆவது அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பொதட்டூர்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலர் ஜி.ரவீந்திரா முன்னிலையில் கட்சிப் பிரதிநிதிகளாக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க.அன்பழகன் தலைமையிலான குழுவினர் பங்கேற்று, புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினர்.
அதேபோல் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளின் செயலர்கள் ஜோதிகுமார், பாபு ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
ஆர்.கே.பேட்டை மேற்கு, கிழக்கு ஒன்றியச் செயலர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி ஆகியோர் முன்னிலையில் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், டி.ஜே.எஸ். ஜோவிந்தராஜன், திருத்தணி சந்திரன், சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில்...
பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் சுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கைபரப்புச் செயலர் அன்பழகன் பங்கேற்று 63 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கிளைச் செயலர் பால்சுதாகர் நன்றி தெரிவித்தனர்.