ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.30 கோடியுடன் தலைமறைவாகி விட்டவரைக் கைது செய்யுமாறும், பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பாரதி நகரில் வசித்து வந்தவர் கோதண்டபாணியின் மகன் மோகன். அவர் 20 ஆண்டு காலமாக அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரை நம்பி அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் சீட்டு கட்டி வந்தனர்.
இந்நிலையில், சீட்டு முடியும் தருவாயில் கடந்த சில நாள்களுக்கு முன் மோகன் ரூ.2.30 கோடி பணத்தை ஏமாற்றி விட்டு வீட்டைக் காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்து பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் புகார் மனு அளித்தனர்.
மோகனை கைது செய்து பணத்தை மீட்டுத் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி., இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவித்தார்.