திருவள்ளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே எறையூர் பகுதியில் புல்லரம்பாக்கம் போலீஸார் புதன்கிழமை அதிகாலை திடீர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எறையூர் ஏரியில் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னவேடு காலனியைச் சேர்ந்த சின்னத்தம்பி(30) மற்றும் அருணகிரி(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.