திருவள்ளூர் அருகே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகைகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூரை அடுத்த ஆவடி நகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மினி- மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் இந்தப் போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்ககாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், வாக்கு சதவீதம் குறைந்த வாக்குச் சாவடி மையப் பகுதிகளில் பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் ஆவடி நகராட்சி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி தற்போது நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 9 கல்லூரிகள் மற்றும் 28 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 480 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டி ஆவடி பெருநகராட்சியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அஜய் விளையாட்டு அரங்கம் வரை 5 கி.மீ தூரத்துக்கு நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.
அதற்கு முன், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் வை.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செ.அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.