மீஞ்சூர் அருகே உள்ள தத்தைமஞ்சி கிராமத்துக்கு, அரசுப் பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்கக் கோரி, அப்பகுதியினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தத்தைமஞ்சி கிராமத்தின் வழியாக டி 27, டி 29, டி 40, 95 ஈ ஆகிய பேருந்துகளும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 527, 595, 558 ஆகிய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் திருவெள்ளைவாயல், காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
இந்த வழித் தடத்தில் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, தத்தைமஞ்சி கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு சரியான நேரத்துக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை திருப்பாலைவனம்- தத்தைமஞ்சி மீஞ்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற காட்டூர் போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
.