திருவள்ளூர் அருகே மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மப்பேடு பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை இரவு மப்பேடு-அரண்வாயல் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதையடுத்து, பின் தொடர்ந்து சென்று லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், லாரியில் சென்றது கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் (39), ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்த கந்தன் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக இருவரையும் மப்பேடு போலீஸார் கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.