ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்றுவந்த காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரை போலீஸார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆர்.கே.பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சிலர் கள்ளச்சாராயம் விற்று வந்ததாக மாவட்ட எஸ்.பி. பொன்னிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில் போலீஸார் மேற்கண்ட பகுதிகளில் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.
அப்போது திருத்தணி காசிநாதபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் ரவியை(47) கைது செய்து திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர் ஏற்கெனவே பலமுறை சாராயம் விற்ற வழக்குகளில் கைதாகி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. பொன்னி, ரவியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். அதே ஏற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பிறப்பித்த உத்தரவின்படி ரவியை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.