திருமலையிலிருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
திருமலையிலிருந்து செம்மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு கார் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருப்பதாக செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை நள்ளிரவில் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸார் மறைவிடத்தில் காத்திருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்தக் காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் 13 செம்மரக்கட்டைகள் இருந்தன. விசாரணையில் அவர்கள் தருமபுரி மாவட்டம் சித்தேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த முருகேசன்(25), அருணாசலம் (30), கந்தசாமி (27), ஓட்டுநர் பெருமாள் வேலு (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர்.