திருவள்ளூர் மக்களவைத் தேர்தலையொட்டி, கும்மிடிப்பூண்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 330 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 1, 600 பேருக்கு புதன்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி கலைமகள் மெட்ரிக் பள்ளியில் உதவித் தேர்தல் அலுவலர் பார்வதி தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு, துணை வட்டாட்சியர்கள் தாமோதரன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் 1,600 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அவர்கள் புதன்கிழமை பிற்பகல் தங்களது வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர். தொலைதூர வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் அலுவலர்களுக்காக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், உதவித் தேர்தல் அலுவலர் பார்வதி முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 330 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 11 நுண் பார்வையாளர்களுடன் உதவித் தேர்தல் அலுவலர் பார்வதி ஆலோசனை நடத்தினார்.
கும்மிடிப்பூண்டி பேரவைத் தொகுதியில் பதற்றம் நிறைந்தவை என தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ள 10 வாக்குச்சாவடிகள், போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ள 111 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் இணையவழியில் கண்காணிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.