ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சி சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட பனையஞ்சேரி, சிஞ்சேரி, எஸ்.வி.சத்திரம் கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சென்னை போன்ற பிற ஊர்களுக்கு பணிநிமித்தமாக செல்ல பெரியபாளையம்-புதுவாயல் இடையிலான பனஞ்சேரி சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.
பொன்னேரி, ஆவடி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், ஆரணி செல்பவர்களும் இந்த சாலையையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலம் வருவதால் இந்தசாலை இன்னும் மோசமடையும்.
புதன்கிழமை பெய்த சிறிய மழைக்கே இந்த சாலையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.