திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தனர்.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் மாட வீதியில் வலம் வந்தார்.
இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
கூட்டம் அதிக அளவு காணப்பட்டதால் பொது வரிசையில் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
விழாவையொட்டி, திருத்தணி முருகன் மலைக் கோயிலில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.