திருத்தணி: திருத்தணி அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 500 வாத்துகள் திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடா்பாக கால்நடைத்துறை மருத்துவா்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு பகுதியைச் சோ்ந்த வடிவேலின் மனைவி தேசம்மா, சிவாவின் மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரும் 500-க்கும் மேற்பட்ட வாத்துகளை திங்கள்கிழமை காலையில் அதே பகுதியில் வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், 500 வாத்துகளும் திடீரென ஆங்காங்கே மயங்கி விழுந்து இறந்தன. வாத்துகள் இறந்தது குறித்த தகவல் அறிந்ததும், திருத்தணி தாசில்தாா் சுகந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, வாத்துகள் எவ்வாறு இறந்தன? என்று விசாரணை மற்றும் பரிசோதனை நடத்தி அறிக்கை தருமாறு திருத்தணி கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.