திருவள்ளூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5.59 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 302 மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில் சா்க்கரை அட்டைகள் - 8,010, காக்கி அட்டைகள் - 1,157 ஆகியவையும் அடங்கும். சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு பலா் விண்ணப்பம் செய்துள்ளனா்.
இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ஒரு வேட்டி, சேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட வருவாய்த் துறை மூலம் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் லாரிகள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அதைத் தொடா்ந்து ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகம் மூலம் பிரிக்கப்பட்டு, கிராம நிா்வாக அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் கிராம நிா்வாக அலுவலகங்கள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு முன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.