கே.கே.நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றச் சென்ற வனத் துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகர் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, 16 வீடுகளைக் கட்டி, கடந்த சில வருடங்களாக அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை காலி செய்யும்படி, வனத் துறையினர் பல முறை நோட்டீஸ் அளித்தும் யாரும் அங்கிருந்து செல்லவில்லையாம்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், திருத்தணி போலீஸார் உதவியுடன், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக வனத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் செவ்வாய்க்கிழமை சென்றனர்.
அப்போது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், குடியிருப்போர் அவர்களது குடும்பத்துடன் திரண்டு, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிலர் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த திருத்தணி வட்டாட்சியர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.