திருவள்ளூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குச் சொந்தமாக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய வளாகங்கள் என மொத்தம் 57 வணிக வளாகங்கள் உள்ளன. அதேபோல், சொத்து வரி மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், இக் கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு, வியாபாரிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான 6 கடைகளுக்கு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வாடகைத் தொகை செலுத்தாத நிலையில், ரூ. 8 லட்சம் வரை நிலுவையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக நகராட்சி சார்பில் பல்வேறு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், வாடகைத் தொகை செலுத்த காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் முருகேசன் உத்தரவின்பேரில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமு மற்றும் உதவி ஆய்வாளர்கள் அருள், முரளி, சத்யா மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று, வாடகை செலுத்தாத குறிப்பிட்ட கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர்.