திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்டு, அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் எஸ்.கலா தலைமை வகித்தார்.
கிளைச் செயலர்கள் புஷ்பா, எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் நகராட்சி தலைவர் ப.சுந்தரராசன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன், முன்னாள் நகராட்சி தலைவர் ராசகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். "இந்த நகராட்சியில் எடப்பாளையம் 3-ஆவது வார்டில் ஆழ்குழாய் அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக 3 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியாருக்கு சொந்தமான இடம் என ஒருதலைப்பட்சமாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நகராட்சியின் 3-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.