திருவள்ளூர் அருகே கிராமங்களில் உள்ள மாணவர்களை மேளதாளத்துடன் அழைத்து வந்து அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தற்போதைய நிலையில் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியரை தனியார் பள்ளி நடத்துவோர் அணுகி சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும் உட்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு குடியிருப்பிலும் 5 வயது பூர்த்தியான குழந்தைகளைக் கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியம், வரதாபுரம் தொடக்கப் பள்ளியில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனர். புதிதாகப் பள்ளியில் சேரும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, உதவி ஆசிரியர் சந்தோஷம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர் சிவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை அவர்கள் விநியோகம் செய்தனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.