திருவள்ளூரில் ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்சிகிச்சை முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தொடங்கி வைத்தார்.
காவல் துறையில் வாகன ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை பாதுகாக்கவும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில், கண் சிகிச்சை முகாம் நடத்தவும், மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகமும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆயுதடைப் படை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்டத்தில் காவல் துறை வாகன ஓட்டுநர் காவலர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் 64 பேர் வரை கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பங்கேற்று, காவல் துறை ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது, பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.