பொன்னேரி அருகே, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சாமியார் ஒருவரை மகளிர் காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள தோட்டக்காடு கிராமத்தில் நிலத்தடி கருப்பசாமி கோவிலில் சாமியாராக இருப்பவர் ராஜசேகர்(45). இவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிச.31-ஆம் தேதி அக்கோயிலுக்குச் சென்ற பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, சாமியார் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜசேகரைக் கைது செய்தனர்.