திருத்தணி அருகே உள்ள மணவூர் மதுரா, குப்பம் கண்டிகை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் வரும் 23-ஆம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி வட்டத்தைச் சேர்ந்த மணவூர் மதுரா, குப்பம் கண்டிகை கிராமத்தில் உள்ள செங்காளியம்மன் கோயில் வளாகத்தில் வரும் 23-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதனால், சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் குறைகள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகளுக்கான மனுக்களை அளித்தால் உடனே பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.