திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் கிரேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). அவர், திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் இரும்புக் குழாய்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அவர், சனிக்கிழமை மாலை பெரிய அளவிலான இரும்புக் குழாய்களை லாரியில் கிரேன் மூலம் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற திருவள்ளூர் கிராமிய போலீஸார் தியாகராஜனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.