பொன்னேரியை அடுத்த வழுதிகைமேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் இருந்த 42 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
இந்த கிராமத்தில் சீத்தாதாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் பெரும்பாலான பகுதிகளை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி தலைமையில் வருவாய்த்துறையினரும் சீத்தாதாங்கல் ஏரியில் 38 ஏக்கர் பரப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டனர்.
இதனிடையே, அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் வரவுக் கால்வாய் ஓடையை தனியார் செங்கல் சூளை நடத்துவோர் செங்கற்களைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்திந்தனர். அதை அறிந்த வருவாய் துறையினர் 4 ஏக்கர் வரவுக் கால்வாய் ஓடை புறம்போக்கு போக்கு நிலத்தை மீட்டனர்.