சோழவரம் அருகே அருமந்தை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருமந்தை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில், மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் புருஷோத்தமன்(32). இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது கடைக்குள் புகுந்த 4 பேர் இவரை தாக்கினர். பின்னர் அவர்கள் கடையில் இருந்த ரூ.11,250 ரொக்கம் மற்றும் மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். அவர்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த புருஷோத்தமன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இது குறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கியதாக, ஆங்காடு பகுதியைச் சேர்ந்த சரத்ராஜ்(22), புழல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(22) ஆகிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.