கும்மிடிப்பூண்டி போலீஸாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலைக் குற்றவாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதன் அருகே ரயில்வே இருப்பு பாதையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபு(24) என்பவரை கொலை செய்த வழக்கில் கணபதி(26) என்பவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் தேர்வழி பகுதியைச் சேர்ந்த துரையிடம் (43) செவ்வாய்க்கிழமை கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் பணம் பறிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் பிரபுவை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதி என்பதும், முன்விரோதம் காரணமாக பிரபுவை அடித்துக் கொன்ற விவரமும் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் கணபதியை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.