திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் 33-ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி அளவில் கரக ஊர்வலம், தீபாராதனை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 11 அளவில் கோயில் அருகில் பெண் பக்தர்கள் கோலம் போட்டு, கூழ் வார்த்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள், இரவு 7 மணியளவில் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 8.30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றன. 10 மணி அளவில் பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.