திருவள்ளூர் நகராட்சியில் பாதாளச்சாக்கடை குழி நிரம்பி வெளியேறும் கழிவு நீர் தெருவில் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் ராஜாஜிபுரம் பகுதியில் கணபதி நகர் மற்றும் குறுக்குத் தெரு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கணபதி நகர், குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் கழிவு நீர் நிரம்பி வெளியேறி வருகிறது. இதுபோல் வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் சாலையில் தேங்குகிறது. இந்த வழியாக நாள்தோறும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நடந்து செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், பொதுவாக திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் முன்புறம் வரும் அப்பாசாமி சாலை வழியாக ஐ.ஓ.பி காலனி, எம்.டி.எம் நகர், புட்லூர் பகுதிகளுக்குச் செல்வதற்கு இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்று இச்சாலையை இரு சக்கர வாகனத்தில் கடந்து செல்கையில், கழிவு நீரின் துர்நாற்றத்தால் அவதிப்பட நேரிடுகிறது. மேலும், தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் பொதுமக்கள் குடியிருப்புகளில் இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே பாதாளச் சாக்கடை பள்ளங்களைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் துரிதப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.