ஊத்துக்கோட்டை அருகே 24-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
By DIN | Published On : 22nd July 2019 07:18 AM | Last Updated : 22nd July 2019 07:18 AM | அ+அ அ- |

பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் ஊத்துக்கோட்டை அருகே வடமதுரையில் வரும் 24-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் நோக்கில், அவர்களது இருப்பிடத்திலேயே குறைகளைத் தீர்ப்பதோடு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடமதுரை கிராமத்தில் வரும் 24-ஆம் தேதி இந்த முகாம் நடைபெற இருக்கிறது.
இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் மனுக்களைப் பரிசீலனை செய்து தகுதியான மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.