செங்குன்றம் அருகே தார் ஷீட் தயாரிக்கும் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அம்பத்தூர் சந்திரசேகரபுரம் 3-ஆவது தெருவில் வசித்து வருபவர் சங்கர் (48). அவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் தார் ஷீட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும், முடியவில்லை. தகவல் அறிந்து மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு, தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும், ரூ.1 லட்சம் மதிப்பிலான தார் ஷீட், கோணிகள், உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.