கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்தக் கோரி அப்பகுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இக் கல்வியாண்டு பள்ளி திறக்கப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கப்படாமல், அதிகளவு காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் வந்துள்ளனர். இந்நிலையில், இப்பகுதி மக்களுடன் சேர்ந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதிரிவேடு போலீஸார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். ஆனால், கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வராத நிலையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என மாணவர்களும், பெற்றோர்களும் கூறினர். பின்னர், மாலை 4 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்து புதன்கிழமையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.