மீஞ்சூர் அருகே காளாஞ்சி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
காட்டுப்பள்ளி ஊராட்சியில், காளாஞ்சி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தையொட்டி, கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 250 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபால், பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள், கால்நடைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காளாஞ்சி பகுதிக்குச் சென்று, அங்கு பயன்படாத நிலையில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நேரில் ஆய்வு செய்தனர்.