திருவள்ளூர் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் அமுதன் (45). இவர், இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அதனை கம்பால் தாக்க முயன்றனர். அப்போது, பாம்பை அடிக்கக் கூடாது எனவும், தான் கையால் பிடித்து விடுவதாகவும் கூறி அமுதன் பிடித்ததாகத் தெரிகிறது. உடனே பாம்பு அவரது கையில் கடித்துள்ளது. இதையடுத்து, வீட்டில் வைத்திருந்த பையில் அந்த பாம்பை உயிருடன் வைத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு தன்னை பாம்பு கடித்து விட்டதாகக் கூறி, பையில் இருந்த பாம்பை மருத்துவர்களிடம் எடுத்துக் காண்பித்தாராம். அப்போது, திடீரென பாம்பு நழுவி தரையில் விழுந்து ஊர்ந்ததால் அப்பகுதியில் இருந்த நோயாளிகளும், பொதுமக்களும் சிதறி ஓடினர். உடனே அமுதன் பாம்பை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர், அமுதனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.