திருத்தணி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.14.70 லட்சம் மோசடி செய்த ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருத்தணி அருகே கூளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.செல்வம்(30). வேலூர் மாவட்டம், கும்மினிப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் மூர்த்தி(60) உள்பட 7 பேரிடம் தனது உறவினர்கள் 3 பேருக்கு அரசுப் பணிக்காக அணுகினார். கல்வித் தகுதிகேற்ப மின்வாரியத்தில் மூன்று பேருக்கும் எளிதாக வேலை வாங்கி விடலாம் என்று மூர்த்தி கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய செல்வம் தனது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், திருநாவுக்கரசு மற்றும் கௌதமி ஆகியோரிடம் பணம் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்படி, மூர்த்தி உள்ளிட்ட 7 பேரும் ரூ.14.70 லட்சம் வரை பணம் பெற்றனர். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தராமல் மூர்த்தி காலதாமதம் செய்தார். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, தர மறுத்துள்ளார்.
இதனால், தாம் ஏமாற்றப்படுவதை அறிந்த செல்வம் இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணப்பன், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூர்த்தியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் வேலூர் அருகே கும்மினிப்பேட்டையில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேரில் சென்ற போலீஸார், மூர்த்தியைக் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி சின்னப்பொண்ணு, அவரது மகள்கள் சுபேதா, மனுஸ் ஷா, அவரது நண்பர்கள் குகன், குமார் மற்றும் உறவினர் திரிபுரசுந்தரி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.