திருவள்ளூரில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, ஆவின் பால் பொருள்களில் ஓட்டு வில்லைகள் ஒட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பங்கேற்று, ஆவின் பால் பொருள்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி, அதைக் கொண்டு செல்லும் வாகனங்களிலும் ஒட்டும் பணியினை அவர் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குகளை பதிய வேண்டும் என்பதை வாக்காளர்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக மாவட்டத்தில் இதுவரை 527 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்துவதே இந்நிகழ்ச்சிகளின் நோக்கமாகும். அதன் அடிப்படையிலேயே ஆவின் பால் சம்பந்தப்பட்ட பொருள்களான நெய், பால் பவுடர், பால்கோவா, மில்க்ஷேக் ஆகிய பொருள்களில் வாக்காளர் வாக்களிக்க வேண்டும். அது அவர்களது கடமை என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன என்றார் அவர்.
தொடர்ந்து, காக்களூர் ஆவின் பால் பண்ணையில், பால் பொருள்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி, பொதுமக்கள் அனைவரிடமும் வாக்களிக்கச் செய்யும் வகையில் ஒட்டு வில்லைகள் மூலம் பொதுமக்களை வாக்களிக்க வலியுறுத்துவோம் எனவும் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.