திருத்தணி அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு காலனியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், தெருக் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. கடந்த, ஒரு மாதமாக தெருக் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதி பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் திருத்தணி - நல்லாட்டூர் மாநில சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கனகம்மாசத்திரம் போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.