பெரும்பேடு கிராமத்தில் 1.37 ஏக்கர் நிலத்தை , போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக மின் வாரிய அதிகாரியை, பொன்னேரி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (57). தாம்பரத்தில் மின்வாரிய அதிகாரி. தற்போது சென்னை செம்பியம் பகுதியில் வசித்து வருகிறார். கார்த்திகேயனின் சகோதரர் காண்டீபன் (53). இவர், பெரும்பேடு பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சொந்தமான 1.37 ஏக்கர் நிலத்தை கார்த்திகேயன் போலியான ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காண்டீபன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த வருடம் நவம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திகேயனைத் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை, ராயபுரம் பகுதியில் இருந்த கார்த்திகேயனை பொன்னேரி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.